Google Find us on Google+ Computer Tips: நாயர் பிடித்த புலிவால்

Sunday, December 15, 2013

நாயர் பிடித்த புலிவால்

                                     கேரளாவில் உள்ள நாயர் சமுதாயம் உழைப்புக்கும், வீரத்துக்கும் பெயர் பெற்ற சமுதாயமாகும். உலகிலேயே முதல் முதலாக ஒருவன் ஒரு உயர்ந்த சிகரத்தில் ஏறிவிட்டோம் என்று பெருமை பொங்க நினைத்துக்கொண்டு இருந்தபோது, அங்கு ‘‘சார் சாயா வேண்டுமா?’’ என்று ஒரு குரல் கேட்டதாம். நமக்கு முன்பு இந்த சிகரத்தில் யார் ஏறிவிட்டார்கள்? என்று அவர் ஆச்சரியத்துடன் பார்த்தபோது, அங்கு ஒரு நாயர் டீ கடை வைத்து இருந்தாராம். அதுபோல, தமிழ்நாட்டிலும் எந்த நகரம் என்றாலும் சரி, நாயர் டீக்கடை இல்லாத ஊர்களே இல்லை எனலாம். அத்தகைய நாயர் ஒருவர் அடர்ந்த காட்டுக்கு சென்றாராம். வழியில் ஒரு புலி கோரமாக உறுமிக்கொண்டு அவர் மீது பாயத்தயாராக இருந்த நேரத்தில், தன் உயிரைக்காப்பாற்ற மிகவும் வீரத்தோடு புலியின் வாலைப் பிடித்துக்கொண்டாராம். புலி சுற்றி சுற்றி வந்தது. அது இழுத்துக்கொண்டு இருந்த நேரத்தில், உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டு நாயரின் உடலில் ரத்தம் கசியத்தொடங்கியது. நாயருக்கு திரிசங்கு சொர்க்க நிலை. புலியின் வாலைப்பிடித்து இருந்த கையை எடுத்தால் புலி கொன்றுவிடும், கையை எடுக்காவிட்டால் புலியின் இழுப்புக்கெல்லாம்கூட சென்று உடலில் காயம் ஏற்படும். இதே நிலையில்தான் இப்போது காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது.

ஒருகாலத்தில் ஆந்திரா, சென்னை மாகாணத்தின் கீழ் இருந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நேரத்தில், தெலுங்கு மொழியைப் பேசும் மக்களைக்கொண்ட கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளை இணைத்து, கர்நூலை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், நிஜாம் மன்னர் ஐதராபாத்தைத் தலைநகராகக்கொண்டு தெலுங்கானா பகுதியை ஆட்சி செய்து வந்தார். நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட்ட நேரத்தில், தெலுங்கானா பகுதியும் ஆந்திராவோடு இணைக்கப்பட்டது. ஐதராபாத் தலைநகராகியது. ஆனால், தெலுங்கானா பகுதி மக்கள் இந்த இணைப்பை விரும்பாமல், தனி மாநிலம் கேட்டே போராடி வந்தனர்.

கடந்த தேர்தலின்போது தனி தெலுங்கானாவுக்கு உறுதி கூறிய காங்கிரஸ் கட்சி, இப்போது அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கும் நிலையில், அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டிய கட்டாயத்தில் சிக்கியுள்ளது. தெலுங்கானா பகுதி மக்கள் தனி மாநிலம் கோரினாலும், மீதம் உள்ள கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் ஒன்றுபட்ட ஆந்திராவே வேண்டும், ஆந்திராவை இரண்டாகப் பிரிக்கக்கூடாது என்று போராடி வருகிறார்கள். இப்போது ஆந்திராவை இரண்டாக பிரிப்பதற்கான நகல் மசோதாவை மத்திய அரசாங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியது. ஜனாதிபதியும் அந்த மசோதாவை ஆந்திர சட்டசபைக்கு அனுப்பவும், ஆந்திர சட்டசபை 6 வாரகாலத்துக்குள் தன் கருத்தைத் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நகல் தனி விமானம் மூலம் ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர முதல்–மந்திரி மாநில பிரிவினைக்கு கடும் எதிர்ப்பாக இருக்கிறார். மேலும், ஆந்திர சட்டசபையில் ஆந்திரா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 175, தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119. எனவே, நிச்சயமாக ஆந்திர சட்டசபை இந்த பிரிவினைக்கு எதிரான தீர்மானத்தையே நிறைவேற்றும். ஆனால், அரசியல் சட்டப்படி மாநில சட்டசபை ஏற்காவிட்டாலும், பாராளுமன்றம் நிறைவேற்றினால் போதும்.

ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில், 6 வாரத்துக்கு பின்னால் பாராளுமன்றத்தில் இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருக்குமா? என்பது சந்தேகமே. ஏனெனில், பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடரும் நடக்காது. அரசாங்கமே இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்யவேண்டிய நெருக்கடி இருக்கிறது. அப்படியே பாராளுமன்றத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால், ஆந்திராவில் உள்ள 25 எம்.பி. சீட்டுகளில் ஒன்றுகூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியோடு கூட்டு வைத்தால், அங்குள்ள 17 சீட்டுகள் மட்டும் முழுமையாகக் கிடைக்கும். இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற முயற்சி செய்து, அது முடியாவிட்டால், ஒட்டுமொத்த மக்களின் கோபத்தையும் சம்பாதிக்க நேரிடும். தேன் கூட்டை கலைத்துவிட்டார்கள். தேன் கிடைக்குமா, அல்லது தேனீக்களின் கொட்டுதல்தான் மிச்சமா? என்பது பாராளுமன்ற தேர்தலின் போதுதான் தெரியும். மொத்தத்தில், நாயர் பிடித்த புலிவால் கதைதான், காங்கிரஸ் கட்சிக்கு என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

No comments:

Post a Comment